Followers

Monday, October 29, 2012

தேவர் ஜெயந்தி விழா: தொண்டர்கள் பசும்பொன் பயணம் பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ. ஏற்பாடு

தேவர் ஜெயந்தி விழா: தொண்டர்கள் பசும்பொன் பயணம் பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ. ஏற்பாடு
மதுரை, அக். 29-

அகில இந்திய பார்வர்டு பிளாக் தமிழ் மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எங்களது அகில இந்திய பார்வர்டு பிளாக் இயக்கத்தின் தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 105வது ஜெயந்தி விழா சிறப்பாக 28, 29 மற்றும் 30ம் தேதியில் கொண்டாடப்படுகிறது. பசும்பொன்னில் நேற்று ஆன்மீக விழா தொடங்கியது. விழாவில் கோவை காமாட்சி ஆதீனம் பேராசிரியர் ஏ.கோபால் கலந்து கொண்டு ஆன்மீக விழா நடத்தினர்.

100 வாகனங்கள் இன்று திங்கட்கிழமை எங்களது கட்சியின் சார்பில் தேவரின் 48-வது குருபூஜை விழா பசும்பொன்னில் அகில இந்திய தலைவர் வேலப்பநாயர், மாநில பொதுச்செயலாளர் (நானும்) தமிழ் மாநில பொறுப்பாளர் ப.முத்து மற்றம் மாநில, மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் ஆகியோர் மாலை 5 மணிக்கு மதுரை ரெயில்வே நிலையத்திலிருந்து 100 வாகனங்களில் புறப்பட்டு பசும்பொன் செல்கிறோம்.

திருப்புவனம் பார்த்திபனூர் மற்றும் அபிராமத்தில் வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கமுதி சென்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பசும்பொன்னில் இரவு 8.30 மணி முதல் 9.00 மணியளவில் தேவர் குருபூஜை சிறப்பாக நடைபெறும். நாளை (30-ந்தேதி) காலை 8.30 மணிக்கு மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு தோழர் வேலப்ப நாயருடன் நானும் மற்றும் நிர்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செய்தும், திருநகர் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தும், ஒத்தக்கடை ராஜகம்பீரத்தில் அமரர் அய்யனன் அம்பலம் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தல், மதுரை மாநகர் நான்கு பிரிவுகளாக பிரிந்து மதுரை மாநகர் முழுவதும் கொடியேற்று விழா, அன்னதானம் விழாக்கள் நடைபெறும்.

மாலை 5 மணிக்கு கோரிப்பாளையம் தேவர் சிலையிலிருந்து என்னுடைய தலைமையில் ஊர்வலம் புறப்பட்டு ஏ.வி.பாலம், கீழமாசிவீதி, தெற்குமாசி வீதி, கான்சாமேட்டுத் தெரு வழியாக ஜான்சிராணி பூங்காவை அடைகிறது. அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. நமது கட்சி சார்பில் நடை பெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு பாலாபிஷேகம்



மதுரை, அக். 29-

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு இன்று பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்தனர். தேசிய பார்வர்டு பிளாக் தலைவர் பி.டி.அரசக்குமார் தலைமையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட முளைப்பாரி, பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.

பின்னர் தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் மாநில அவைத் தலைவர் ராஜபாண்டியன், துணை பொதுச்செயலாளர் நல்லமணி, மாவட்ட நிர்வாகிகள் முத்துராமலிங்கம், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமானோர் தொடர் ஜோதி ஏந்தி வந்தனர்.

இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அகில இந்திய பார்வர்டு பிளாக் தமிழ் மாநிலக்குழு சார்பில் நாளை காலை 9 மணிக்கு மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சந்தானம் தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. பின்னர் 100 வாகனங்களில் பசும்பொன் செல்கின்றனர்.

இதனை தொடர்ந்து அரசரடியில் உள்ள மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதில் பொதுச் செயலாளர் சுரேந்திரன், பொருளாளர் மகேஸ்வரன், உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். மாலை 4 மணிக்கு சந்தானம் தலைமையில் தமுக்கத்திலிருந்து தேவர் ஜெயந்தி ஊர்வலம் நடக்கிறது. பின்னர் ஜான்சி ராணி பூங்காவில் உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து தெற்குமாசி வீதி-மேல வீதி சந்திப்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

முத்துராமலிங்க தேவரின் 2 ம் நாள் குருபூஜை விழா: ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்தினர்

முத்துராமலிங்க தேவரின் 2 ம் நாள் குருபூஜை விழா: ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்தினர்
கமுதி, அக். 29-

முத்துராமலிங்கத் தேவரின் 2-ம் நாள் குருபூஜை விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவாலயத்தில் நேற்று குருபூஜை விழா தொடங்கியது. 2-ம் நாள் குருபூஜை விழா இன்று காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் தேவரின் அரசியல் வாழ்வு குறித்த கருத்தரங்குகளும் நடைபெற்றது. 2-ம் நாள் குருபூஜை விழாவையொட்டி ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்தினர். லட்சார்ச்சனை பூஜையும் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஜோதி ஏந்தி வந்தனர். முன்னதாக நேற்று இரவு தேரோட்டமும், திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.